பல வருடங்களாக இராணுவம் ஆக்கிரமித்திருந்த, வடக்கில்
தமிழர்களுக்குச் சொந்தமான 200 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன.
ஆனால் காணி உரிமையாளர்கள் மீண்டும் அதற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 சத வீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணியில் 55,000 சதுர அடி பரப்பளவில் கண்ணிவெடிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக மே 30ஆம் திகதி முதல் ஜூன் 10ஆம் திகதி வரை காணிக்குள் நுழைய வடமாகாண ஆளுநர் அலுவலகம் முழு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணி விடுவிக்கப்பட்டு ஒன்றரை மாதங்களின் பின்னர் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்லஸ் மே 7 அன்று பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
இதேவேளை, கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக அரச பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியிருந்தனரா என்பதை வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவிக்கவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் பூநகரி மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
காணி விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், கண்ணிவெடிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தெல்லிப்பளை மற்றும் ஒட்டகபுலம் காணிகளின் தொழில்நுட்ப பரிசோதனை ஏற்கனவே மாவட்ட செயலகத்தினால் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை ஒட்டகபுலம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 234.8 ஏக்கர் காணியை மார்ச் 22 ஆம் திகதி பலாலி விமானப்படை தளத்தினரிடமிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் ஐந்து கிராம சேவைகர் பிரிவுகளுக்குச் சொந்தமான 234 ஏக்கர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் குறித்த காணி அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்துடன் இணைந்து விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
வசாவிளான் கிழக்கு (ஜே/244), வசாவிளான் மேற்கு (ஜே/245), பலாலி வடக்கு (ஜே/254), பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி தெற்கு (ஜே/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளின் கீழ் 234.8 ஏக்கர்கள் விடுவிக்கப்பட்டன.
இங்கு வசிக்கும் 327 குடும்பங்கள் தமது காணி உரிமையை பதிவு செய்துள்ளதாகவும் அவர்களில் 171 குடும்பங்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி துப்புரவு பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் வடமாகாண சபையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.