பாறுக் ஷிஹான்
கல்முனை மேல் நீதிமன்றத்தினால்
இடைக்கால தடை உத்தரவின் மூலம் நிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பிலானவழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதுவரை நியமனம் தொடர்பிலான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று (5) கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு எதிராக இடைக்காலத்தடை வழங்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட வழக்கு மீண்டும் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸியின் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர்களின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளின் வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில் மன்றில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் நியமனம் தொடர்பிலான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க இரு தரப்பினர்களும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இதனடிப்படையில் இடைநிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் சம்பந்தமாக சில ஆலோசனைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் கீழ்வரும் விடயங்கள் எதிர்வரும் தவணைக்கு முன்னர் முன்னெடுக்க குறித்த வழக்கில் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டன.
26.05.2024 ஆம் திகதி நியமனங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட பரீட்சார்த்திகளின் பட்டியலும் பின்னர் இணையத்தில் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு பரீட்சார.த்தியும் தனது பெறுபேறுகளைப் பெற முடியுமான பொறி முறையும் வெளியிடப்படிருந்தது.
தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் ஒருவர் பெற்ற புள்ளிகளுக்கும் இணையத்தில் அவரின் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்யும் போது வரும் புள்ளிகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்பட்டன.
இது தொடர்பாக பிரதிவாதிகள் விளக்கமளிக்கையில் தெரிவு செய்யப்பட்டோரின் பட்டியல் கணினிப் பிசகு காரணமாக பிழையாக புள்ளிகள் உள்ளீட்டம் செய்யப்பட்டதாகவும் பரீட்சார்த்திகளின் அடையாள அட்டைகளை உள்ளீடு செய்து இணையத்தில் பெறப்படும் புள்ளிகளே சரியான புள்ளிகள் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதோடு இந்தத் தவறு சம்பந்தமாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு ஜூன் மாதம் 25 மீண்டும் விசாரணைக்கு வரும. போதிலும் அதற்கிடையில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதிவாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மீண்டும் இணையப் பொறிமுறை செயற்படும். அதில் அடையாள அட்டையை இட்டு புள்ளிகளை இன்னொரு முறை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும்.
அதனை இதற்கு முன்னர் இணையத்தில் நீங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெற்ற புள்ளிகளோடு ஒப்பிட்டு பார்க்க முடியும். அதில் வித்தியாசம் வருமாக இருந்தால் உடனே கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புள்ளிகள் வெளியிடப்பட்டு அவற்றை ஒப்பிட்டு பரிசோதித்து தெளிவு பெற ஒரு வாரகால அவகாசம் தரப்படும். அதற்குள் ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனே பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்வதன் மூலம் தெரிவிக்க முடியும்.
நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் சான்றிதழில் (effective date) சம்பந்தமாக ஏதாவது குழப்பங்கள் நடந்து அல்லது பாடங்கள் சம்பந்தமாக ஏதாவது குழப்பங்கள் நடந்து நேர்முகப் பரீட்சைக்கு நிராகரிக்கப்பட்டவராக இருந்தால் சரியான ஆவணங்களோடு மேன் முறையீடு செய்து மீண்டும் நேர்முகப் பரீட்சைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்க முடியும்.
குழப்பங்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ள ஒரு வலயத்தில் ஒரு பாடத்துக்கு எத்தனை வெற்றிடங்கள் உள்ளன என்பது வெளியிடப்படாமையாகும்.
அந்த பட்டியல் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதனோடு விண்ணப்பித்த பாடத்தின் வெட்டுப்புள்ளிகளோடு அனுமதி வழங்கப்படும் குறிப்பிட்ட பாடத்துக்கு ஒரு மாவட்டத்தில் 10 பேர் தேவை என்றிருந்தால் நீங்கள் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் நீங்கள் 11வது ஆள் என்றால் நீங்கள் அந்தப் பாட நியமனத்துக்கு தகுதியானவர் அல்ல.( பின்னர் வெளியிடப்படும்).முக நூலில் எவரையும் விமர்சிப்பது, அரச உத்தியோகத்தர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்துச் சொல்வது, நீதிமன்றக் கட்டளைகளை சாடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
நியமனத்துக்கு தகுதி இல்லை என்பது தெரிந்தால் அதனை ஏற்றுக் கொண்டு வேறு வழிகளைத் தேட மனுதாரர்கள் முன்வர வேண்டும்.
புள்ளிகளில் எதாவது குழறுபடிகள் இருப்பின் நீதிமன்றத்தை நாடு முன்னர் அவற்றைத் தீர்த்துக்கொள்ள மேன் முறையீடுகள் மூலம் முயற்சி செய்யுங்கள்.
நீதிமன்றம் இறுதித் தீர்வாகவே இருக்க வேண்டும் என இரு தரப்பினர்களும் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.