கடந்த சில வாரங்களாக அரசியல் களத்தில் பெரிதும்
பேசப்பட்டு வந்த சஜித்-அநுர விவாதத்துக்கு நேற்று (06) திகதி குறிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறித்த நிகழ்ச்சிக்குத் தயாராக வந்தபோதும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நிகழச்சியில் பங்கேற்கவில்லை
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார ஆகியோர் விவாதம் நடத்துவதற்கான திகதி நேற்று (06) நேற்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் தொலைக்காட்சி உரையாடலை நேரடியாக ஒளிபரப்புவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் என சுயாதீன தொலைக்காட்சி சேவை (ITN) இரு தரப்பினருக்கும் கடந்த 4 ஆம் திகதி அறிவித்திருந்தது.
இதன்படி விவாதத்தில் கலந்து கொள்ள தமது கட்சியின் தலைவர் அநுர திஸாநாயக்க தயார் என தேசிய மக்கள் சக்தி சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு (ITN) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
நேற்று 6 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு தனது ஊடக நிறுவனத்துக்குச் சொந்தமான HD ஸ்டுடியோவில் விவாதத்தை நடத்துவதற்கு ITN அலைவரிசை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன நேற்று (06) ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இறுதி நேரத்தில் விவாதத்தில் பங்கேற்பார் என அவர் நம்பிக்கையையும் அவர் வெளியிட்டிருந்தார்
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நேற்று மாலை சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் TN) தலைவருக்கு கடிதம் மூலம் தனது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச விவாதத்தில் பங்கேற்க மாட்டார் என்று அறிவித்திருந்தார்.
உத்தேச விவாதம் தொடர்பாக முதலில் பொருளாதாரக் குழு விவாதமும் பின்னர் தலைமைத்துவ விவாதமும் தனது கட்சியின் கட்டாய நிபந்தனை என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திஸாநாயக்க, குறித்த நேரத்துக்கு ITN க்கு வருகை தந்ததுடன், சஜித் பிரேமதாச இல்லாத வேளையில் விவாதத்தை நடத்தாமல் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, சஜித் பிரேமதாசவுக்கு அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தை அகற்றுவதே சிறந்தது என்ற அநுரகுமார திஸாநாயக்கவின் யோசனைக்கு ITN அதிகாரிகள் இணக்கம் தெரிவித்ததையடுத்து இந்த உரையாடல் ஆரம்பமானது.
வழமை போன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதர்மன் ரதலியாகொடவின் நெறிப்படுத்தலில் இந்த "துலாவ" அரசியல் நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதேவேளை, சுயாதீன தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த உரையாடலைப் பார்ப்பதற்காக ஆரம்பத்தில் குறைந்தது 4 மில்லியன் மக்கள் கூடியிருந்ததாக சில ஊடக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடைசி வரை 2.7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்றும் காட்டியுள்ளனர்.
திட்டமிட்டபடி விவாதம் நடந்திருந்தால் அதைப் பார்க்க திரண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
2.7 மில்லியன் மொத்த பார்வையாளர்கள் நிகழச்சியை இறுதிவரை பார்த்ததுடன், குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், யூடியூப் ஊடகம் ஊடாக அநுரகுமார திசாநாயக்க மாத்திரம் பங்குபற்றிய நிகழ்ச்சியை இன்று (07)பிற்பகல் வரை சுமார் மூன்று இலட்சம் பார்வையாளர்கள் பார்த்திருந்தனர்.