பாறுக் ஷிஹான்
நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியும்
விநியோகத்தும் வந்ததாகக் குற்றச்சாட்டின் அடிப்படையில் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு தாளவட்டுவான் சந்தி அருகில் வெள்ளிக்கிழமை (07) இரவு சந்தேகத்துக்கிடமாக இருவர் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் குறித்த இருவரையும் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துநர்கள் என அடையாளம் காணப்பட்ட இவர்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
இரு சந்தேக நபர்களிடமிருந்தும் 3,300 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இரு சந்தேக நபர்களும் மத்திய முகாம் பகுதியை சேர்ந்தவர்களாவர்.
32 மற்றும் 37 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.