பாறுக் ஷிஹான்
மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை
வைத்தியர் ஒருவர் செலுத்திச் சென்ற கார் மோதியதுடன் அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், கல்முனை தலைமையக பொலிஸாரினால் அவரது கார் கைப்பற்றப்பட்டதுடன் வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை (8) இரவு இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்தை ஏற்படுத்திய வெள்ளை நிற கார் தப்பிச் சென்ற நிலையில் அதே வைத்தியசாலை வளாகத்தில் தரித்து நின்ற நிலையில் கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு அதனைச் செலுத்தி சென்றதாக கூறப்படும் வைத்தியரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்
இவ்வாறு கைதான வைத்தியர் என கூறப்படும் நபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்று வருவதுடன் விரிவான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.