பாறுக் ஷிஹான்
தமிழீழ விடுதலைப் புலிகளிடம்
சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 34 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஷடிக்கும் முகமான நிகழ்வு இன்று (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸார், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டன.
நிகழ்வின் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்மவினால் பொலிஸ் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
1990 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றதுடன் அவர்களது ஆயுதங்களையும் கைப்பற்றினர்.