பாறுக் ஷிஹான்
சம்பள முரண்பாட்டைத் தீர்க்க
வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று (12) போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இன்று தொழிற்சங்க கூட்டமைப்பு கல்முனை வாடி வீட்டு வீதியிலிருந்து பேரணியாக கல்முனை மாநகர பகுதிக்குச் சென்று இப்போராட்டத்தை முன்னெடுத்ததுடன் சுபோதினி என்ற அறிக்கை ஊடாக வழங்கப்பட்ட வாக்குறுதியை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன.
குறித்த போராட்டமானது நாடளாவிய ரீதியாக சகல கல்வி வலயங்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அதிபர் ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தில்பங்கேற்ற ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பானது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
சகல கல்வி வலயங்களுக்கும் முன்பாக மேற்கொள்ளப்படவுள்ள அதிபர் ஆசிரியர்களின் போராட்டமானது ஏன் நடத்தப்படுகிறது என்பது தொடர்பில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும்
ஏனெனில் நாங்கள் கேட்பது சம்பள அதிகரிப்பு அல்ல. சம்பள முரண்பாட்டுக்கான தீர்வையே.
சுமார் 27 வருடங்கள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள்தான் எமது ஆசிரியர்கள், அதிபர்களின் இவ்விடயத்தில் ஏமாற்றி வந்துள்ளன.
இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். அதிகார வர்க்கங்களினால் அவ்வப்போது இவை நசுக்கப்பட்டு வந்தன.
2021 ஆண்டு எமது போராட்டத்தின் விளைவாக சுபோதினி என்ற அறிக்கை தயாரிக்கப்பட்டு அதன் ஊடாக எமக்கு உரிய சம்பள உயர்வை வழங்குவதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டோம். எனினும் இந்த அறிக்கையின் ஊடாக வழங்கப்பட்ட வாக்குறுதி தவிர்க்கப்பட்டு இன்று வரை நாங்கள் ஏமாற்றப்பட்டு வருகிறோம்.
குறிப்பாக, கூறப்போனால் மத்திய வங்கியில் கடமையாற்றும் ஒரு இலிகிதரின் சம்பளத்தை கூட 35 வருடங்களாக கடமையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியரால் இன்றுவரை பெற முடியவில்லை.
இந்த நிலை இலங்கையில் தொடர் கதையாகவே உள்ளது. எனவே, சுபோதினி அறிக்கை ஊடாக எழுத்து மூலமாக எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என வலியுறுத்தி நாளை 12 ஆம் திகதி சகல ஆசிரியர்கள் அதிபர்களும் கல்வி வலயங்களுக்கும் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள் என்றனர்.