பாடசாலை ஆசிரியை ஒருவரின் உருவத்தில்
நிர்வாணப் படத்தை வரைந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் அதே பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபரான மாணவனை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு குளியாபிட்டிய நீதிவான் லக்மால் ஜயலத் உத்தரவிட்டார்.
இந்த வழக்கை ஆகஸ்ட் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபரான மாணவனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய குளியாப்பிட்டிய பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க, இந்தச் சம்பவத்தினால் குறித்த ஆசிரியர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.
சந்தேக நபரால் வரையப்பட்ட குறித்த புகைப்படத்தை முகநூல் மற்றும் டெலிகிராமில் பதிவிட்டு ஆசிரியையின் வட்ஸ்அப்புக்கு அனுப்பியதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.