ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்குப் பின்னர், தம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் எதிர்வரும் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கை வெளியிடவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட உறுப்பினர் குணதிலக ராஜபக்க்ஷ கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், நாட்டின் முக்கிய நிர்வாக மையமொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் ஏமாற்றமடைவதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் சிசிரிவி காட்சிகளை அவதானித்தால் இது தொடர்பான சம்பவத்தை தெளிவாக காண முடியும் என தெரிவித்த அவர், சம்பவம் இடம்பெற்றபோது அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரிடம் இது தொடர்பான சம்பவத்தை பார்த்ததாக கூறவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆளும் கட்சி எம்.பி குழுக் கூட்டத்தில் மஹிந்தானந்த அளுத்கம எம்.பி மற்றும் குணதிலக்க ராஜபக்க்ஷ எம்.பி.க்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்பட்டது.
தாக்குதலின் பின்னர், குணதிலக்க ராஜபக்க்ஷ இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கால் முறிவு காரணமாக நான்கு மணிநேர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
படிக்கட்டில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்று கூறிய குணதிலக்க ராஜபக்க்ஷ, சினிமாவில் வரும் காட்சியைப்போல தான் உதைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.