குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் 30 கோடி
ரூபா கப்பம் கோரியதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குவதற்கு அவுரா நிறுவனத் தலைவர் அனுமதி கோரியுள்ளார்.
நேற்று (13) கொழும்பு மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜாவிடம் சந்தேக நபரான அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தபுகல விடுத்த இந்தக் கோரிக்கையையடுத்து அதற்கான திகதியாக எதிர்வரும் 18 ஆம் திகதியை நீதிவான் வழங்கினார்.
சந்தேக நபர் தபுகல நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த போதிலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஆஜராகாமையால் இந்தத் திகதி குறிக்கப்பட்டது.
ஹெலிகொப்டர் கொள்வனவு செய்வதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு 70 மில்லியன் ரூபாவை (ஏழு கோடி) மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை, சந்தேக தபுகல, கடந்த 27ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில், கப்பம் கோரும் குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியங்களை சமர்ப்பித்துள்ளார். சந்தேக நபரிடம் குற்றப்ப புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 30 கோடி ரூபா கப்பம் கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் தபுகல தனது சட்டத்தரணி உபாலி ஜயமான்ன ஊடாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்