சட்டபூர்வமான வைத்தியர்போல்
நடித்து சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு மருந்து வழங்கிய மருத்துவ மாணவி ஒருவரை நாளை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனவல உத்தரவிட்டுள்ளார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதிவான், சந்தேகத்துக்குரிய மாணவி பாரிய குற்றத்தை செய்துள்ளதாகவும் இது நீதிமன்றத்தால் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும் என்றும் நீதிவான் கூறினார்.
மேலும், சந்தேகத்துக்குரிய மருத்துவ மாணவி கொலைக்கு ஒப்பான குற்றத்தை செய்துள்ளதாக நீதிவான் சுட்டிக்காட்டினார்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணி புரிவதாக கூறப்படும் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவரின் மகளே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாடு செய்த தம்பதியரின் 6 மற்றும் 4 வயதுடைய இரண்டு பிள்ளைகள் இருமல் மற்றும் சளி காரணமாக கடந்த 3 ஆம் திகதி வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சந்தேக நபரான மருத்துவத்துறை மாணவி, சட்டரீதியான வைத்தியர் போல் பாவனை செய்து பரிசோதித்து சிகிச்சையளித்துள்ளதாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்வைத்த வாதங்களில் சந்தேகத்துக்குரிய வைத்தியத்துறை மாணவி, 5 நாட்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைக் குழந்தைகளுக்கு வழங்கியதாகவும் ஆனால் அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
பின்னர் மனுதாரர் இரு குழந்தைகளையும் மற்றுமொரு விசேட வைத்தியரிடம் அழைத்துச் சென்று இரு பிள்ளைகளுக்கும் மருந்து கொடுத்ததன் மூலம் உயிருக்கு ஆபத்து நீங்கியுள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்துக்குரிய வைத்திய மாணவி, மற்றுமொரு வைத்தியரின் இறப்பர் முத்திரையைப் பயன்படுத்து கையொப்பமிட்டிருந்ததையடுத்து சந்தேகமடைந்து பாதிக்கப்பட்ட தம்பதியினர் சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த மோசடி சம்பவம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
மேலும் இந்த மருத்துவ மாணவி இறுதியாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று பட்டதாரி சான்றிதழ் கூட பெறவில்லை என்றும் மருத்துவ பட்டம் பெற்ற ஒருவர் அரசு மருத்துவமனையில் சுமார் ஓராண்டு வரையறுக்கப்பட்ட பயிற்சிக்கு பின் தனது தொழிலை மேற்கொள்ளலாம் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
விசேட வைத்தியரான அவரது தாயாரும் மருத்துவ மாணவியை இவ்வாறான செயலில் ஈடுபட அனுமதித்ததன் மூலம் பாரிய தவறை இழைத்துள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் நீதிமன்றில் பி அறிக்கையை சமர்ப்பித்த போதிலும் சந்தேக நபரான மருத்துவ மாணவி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாத நிலையில், இது தொடர்பில் கவனம் செலுத்திய நீதிவான் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
இதன்படி, சந்தேகத்துக்குரிய மருத்துவ மாணவியை நீதிமன்றில் வெல்லம்பிட்டிய பொலிஸார் முன்னிலைப்படுத்தினர் இதனையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டது.
சந்தேகத்துக்குரிய மருத்துவ மாணவியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த மாணவி தனது தாயின் மேற்பார்வையில் சிகிச்சை அளித்ததால் எந்த தவறும் செய்யவில்லை என்றார்.