பல்வேறு குற்றச் செயல்களில்
ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற சுமார் 40 பாதாள உலக செயற்பாட்டாளர்கள் துபாயிலும் பிரான்ஸில் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதாள உலக செயற்பாடுகள் இடம்பெறும் 43 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அந்த 43 பிரிவுகளும் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ளதாகவும், இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதாள உலக செயற்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சுமார் 1091 பாதாள உலக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கஞ்சிபான இம்ரான் போன்று வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொள்ள பாதாள உலக குழுவொன்று செயற்பட்டு வருவதாக அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளுக்கும் தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளை, கிளப் வசந்த என்ற கோடீஸ்வர வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையின் பின்னர், சிறையில் உள்ள பாதாள உலகக் குழுவினருக்கு இடையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.