இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட
கிரிக்கெட் அணியின் தலைவராக விளையாடிய 'ஜோன்டி' எனப்படும் தம்மிக்க நிரோஷன நேற்று முன்தினம் (16) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்
அம்பலாங்கொடை போகஹவத்தை கந்த மாவத்தையில் வசிக்கும் தம்மிக்க நிரோஷன என்பவரே இரவு 9.30 மணியளவில் அவரது வீட்டுக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கியால் சுடப்பட்டதில் அது அவரது தலையை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டுக்கு அருகில் உள்ள காணி ஒன்றிலிருந்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் நடந்தே தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அப்போது, அப்பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உயிரிழந்தவர் வீட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
41 வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
2002ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராக விளையாடிய அவர், அதன் பின்னர் மீண்டும் வெளிநாடு செல்லும் நோக்கில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நபர் ஒருவருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, இதற்கு முன்னரும் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.