அதுருகிரிய பச்சை குத்தும்
நிலையத்தில் கிளப் வசந்த உட்பட இருவரைச் சுட்டுக் கொன்று பாடகர் கே. சுஜீவ உள்ளிட்ட நால்வரை படுகாயமடையச் செய்த பாதாள உலக குத்தகைக் கொலையாளிகள் இருவரும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என விசாரணை ஈடுபட்டுள்ள குழுக்கள் சந்தேகிக்கின்றன.
அவர்கள் தென் கரையோரம் ஊடாக மீனவப் படகில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வாடகைக் கொலையாளிகளை கைது செய்ய பல இடங்களில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சோதனையிட்ட போதும் அவர்கள் தொடர்பில் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
இதுபற்றி விசாரணையில் ஈடுபட்ட சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இவ்வாறு திட்டமிட்டு மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்படும்போது, அதில் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் தயாராகின்றனர்.
எனவே, தாக்குதல் நடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் கொலையாளிகள் இருவரும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவரும் தப்பிச் சென்றதற்கான சரியான தகவலும் ஆதாரமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
தாக்குதல் நடத்திய இரு கொலையாளிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர்கள் தாக்குதலை நடத்திய விதம் அதனை உறுதிப்படுத்துவதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிளப் வசந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 10 பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் உதவிய 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், கொலையாளிகள் இருவரையோ திட்டமிட்ட நபர்களையோ இதுவரை கைது செய்ய முடியவில்லை.
காஞ்சிபான இம்ரான், லொகு பெட்டி, உனகுருவே சாந்த மற்றும் ரொட்டம்பே அமில உள்ளிட்ட பாதாள உலகக் குழுவொன்று இந்தத் தாக்குதலை வழி நடத்தியதாக பாதுகாப்புப் படையினர் நம்புகின்றனர்.