அதுருகிரியவில் இனந்தெரியாத
இருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட கிளப் வசந்த நாடு முழுவதும் கடனாளியாக இருந்தவர் என்பது தற்போதைய விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாகந்துர மதூஷிடமிருந்து பெருந்தொகை பணம் கடனாகப் பெற்றதாகவும் இந்நிலையில் மதூஷை கைது செய்ய கிளப் வசந்தா பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதாகவும் சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் பணம் பெற்றதாகவோ அல்லது தகவல் வழங்கியதாகவோ தெரிய வரவில்லை.
உயிரிழந்த கிளப் வசந்த ஆடம்பர வாழ்க்கை வாழும் காணொளிகள் பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்ட போதிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் பெரும் நிதி நெருக்கடியில் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: நாட்டில் நடக்கும் எந்தவொரு கொலைச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்தால் அந்த நபர்களுக்கு எதிராக எந்தத் தரமும் பார்க்காமல் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றார்.