1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்

மத்திய சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுச் சென்றுள்ள போதிலும் இன்று வரை வைத்தியர்களுக்குரிய வைத்தியசாலை தங்குமிட விடுதியை மீள ஒப்படைக்கவில்லை. 

இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துக்கும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், தாம் வலிந்து தொழிற் சங்கப் போராட்டத்துக்கு தள்ளப்படுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
குறித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அந்த அறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சமீப காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து முன்னைய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த 7 ஆம் திகதி அன்று மத்திய சுகாதார அமைச்சினால், மத்திய சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்படுவதாக எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டது.
 
மேலும் சுகாதார அமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் தற்போது வைத்திய அத்தியட்சகராகப் பொறுப்பேற்றுள்ள வைத்தியரே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எனத் தெளிவாகக் கூறியுள்ளமை எமக்கு மன வலிமையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால் வழமை போல் நோயாளர்களது சேவைகளை செவ்வனே இடையூறின்றி வழங்குவதற்கு ஏதுவான சூழ்நிலைகளைத் தோற்றுவித்துள்ளது. 
 
இருப்பினும் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மத்திய சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுச் சென்றுள்ள போதிலும் இன்று வரை வைத்தியர்களுக்குரிய வைத்தியசாலை தங்குமிட விடுதியை மீள ஒப்படைக்கவில்லை.
 
இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
 
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா திணைக்கள முடிவுகளையும், சட்ட நடவடிக்கைகளையும் உதாசீனப்படுத்தி மீண்டும் வைத்தியசாலைக்குள் உட்பிரவேசித்து வைத்தியசாலை நடவடிக்கைகளுக்குப் பங்கம் விளைவிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவாரானால் வைத்தியசாலை மற்றும் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் நலன் கருதி அங்கு அமைதியைப் பேணி சுமூகமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் எமது உறுப்பினரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நாம் வலிந்து தொழிற்சங்கப் போராட்டத்திற்குத் தள்ளப்படுவோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
 
ஒட்டு மொத்த சமூகத்தின் .நலன் கருதியே நாம் இவ் முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி