கிளப் வசந்த என்றழைக்கப்படும்
சுரேந்திர வசந்த பெரேரா துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, எதிர்காலத்தில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 8ஆம் திகதி அதுருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
நீதிமன்ற அனுமதியின் பேரில் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது ஏனைய குழுவினர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளப் வசந்தவைக் கொல்ல வந்த துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் பாதுகாப்புப் படையில் முன்னர் பணி புரிந்தவர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக்கொலைக்குப் பின்னர் அவர்கள் தப்பிச் செல்வதற்காக விசேட பஸ் ஒன்றும் தயார் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் ஊடாக அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உள்ளிட்ட குழுவினர் அத்துரிகிரிய பிரதேசத்தில் 6 மாத காலத்துக்கு வாடகை வீடொன்றையும் பெற்றுள்ளதாகவும், அதற்காக 6 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் ஆலோசனையின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.