பாறுக் ஷிஹான்
மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த
மாமனாரின் உடல் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் பிரிவு 09 இன்று(21) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபரான 32 வயதுடைய சந்தேக நபர் றிஸ்வி முகமட் அன்சார் தலைமறைவாகியுள்ளார்.
தனது மகளை விவாகரத்துச் செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடே கொலையில் முடிவடைந்துள்ளதாக அடிப்படை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விடயத்தில் தனது மாமாவுடன் தகராறு செய்து வந்த மருமகன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி மரணடைந்த 62 வயதுடைய மீராசாயிப் சின்னராசா என்பவரின் உடல் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.