22ஆவது அரசியலமைப்புத் திருத்தச்
சட்டமூலம் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 18ஆம் திகதி வெளியிடப்பட்டது. வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் ஏழு நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்க முடியும்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஆறிலிருந்து ஐந்தாகக் குறைக்க வழிவகை செய்கிறது.
இதேவேளை, இந்த சட்டமூலத்தின் ஊடாக தேர்தலை பிற்போட முயற்சித்தால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.