MTV செனல் தனியார் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இலக்கம் 6 நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் முன்வைத்த கோரிக்கையை மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்று நிராகரித்துள்ளார்.
இதற்கிணங்க, மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெலவினால் இலக்கம் – 01 நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 08 ஆம் திகதி மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மேலதிக மாவட்ட நீதிபதி சதுன் விதானகேவிற்கு இந்த வழக்கை மாற்றுமாறு ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கோரிக்கை விடுத்ததுடன், ஆரம்பத்தில் ஒருதலைப்பட்ச தடையுத்தரவு அவரினால் பிறப்பிக்கப்பட்டமை மற்றும் கடந்த மாதம் 07 ஆம் திகதி அவரினால் தடையுத்தரவு நீடிக்கப்பட்டமை ஆகிய விடயங்களை அடிப்படையாக வைத்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா கடுமையாக ஆட்சேபித்தார்.
வழக்கு தரப்பினருக்கு தேவையான விதத்தில், சிந்தனைக்குப் புலப்படும் வகையில், வழக்கை விசாரிப்பதற்கு நீதிபதிகளை தெரிவு செய்வது மிகவும் தவறான முன்னுதாரணம் எனவும் அதன் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்