"அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட தனிமனித சுதந்திரம், தனியார் சட்டங்களுக்கான அவகாசம் என்பவற்றை கருத்தில் கொண்டு, தனியார் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாமே தவிர, முஸ்லிம் தனியார் சட்டத்தை முழுவதுமாக நீக்க வேண்டுமென்கின்ற முயற்சிகளுக்கு, எனது வன்மையான எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்" என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் இன்று (09.02.2021) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
"ஒரே நாடு. ஒரே சட்டம்" என்கின்ற விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளாத நிலைகள், அது நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கொவிட்19 மூலம் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயமாக எரிக்கின்ற நிலையும் இதனாலேயே உண்டாகியுள்ளது.
துறைக்குப் பொறுப்பான அமைச்சர், நீரின் மூலமாக கொரோனா பரவல் ஏற்படாது என இன்று காலை நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது, தெரிவித்ததன் அடிப்படையில், துறைசார் நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைவாகவும், ஜனாஸாக்களை அடக்குவதற்கான அனுமதி துரிதமாக வழங்கப்பட வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.