நெற் செய்கையின் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை உலரவிடுவதற்காக பிரதான வீதிகள் உள்ளக வீதிகளை விவசாயிகள் பயன்படுத்துவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் 63,000 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை சந்தைப்படுத்துவதற்காக விவசாயிகள் தமது ஈரப்பதமான நெற்களை உலரவிடுவதற்காக இச்சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.
குறித்த நிலைமை போதியளவு நெல் உலரவிடும் தளமின்மையால் வீதியில் தாம் இவ்வாறு உலரவிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இச்செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை , பாலமுனை , ஒலுவில் ,பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று ,நிந்தவூர் ,சம்மாந்துறை, காரைதீவு ,கல்முனை ,நாவிதன்வெளி , நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம் , 6 ம் கொலனி , ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் இச்செயற்பாடு தொடர்கதையாகவே உள்ளது.
இவ்வாறு வீதிகளில் மூட்டை மூட்டைகளாக வீதிகளில் நெற்களை குவித்து உலர விடுவதனால் வீதியில் விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இதே வேளை கொரோனா அனர்த்தத்தின் மத்தியிலும் இம்முறை இம்மாவட்டத்தில் 63,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் மற்றும் தனியார் கடன்களின் மூலம் விவசாய செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் அண்மையில் பெய்த அடைமழை காரணமாக நெற்களில் ஈரப்பதனை அகற்ற உலர்தளம் இன்மையினால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.