ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு உரித்தான காணியில் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை முகாமை வேறு இடத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த 7 ஆம் திகதி ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியானது.
துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்தின் பிரகாரம் அந்த முகாம் சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட காணியில் அமைந்துள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற ஜெனரல் தயாரத்நாயக்கவை மேற்கோள்காட்டி அந்த பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று வினவப்பட்டது.
அதற்கு அமைச்சர் உதய கம்மன்பில பின்வருமாறு பதிலளித்தார்,
” ஜனாதிபதி இது குறித்து சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது துறைமுகத்தின் முழு பாதுகாப்பிற்கான பொறுப்பையும் இலங்கை கடற்படைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கடற்படை முகாமை அப்புறப்படுத்துவது குறித்து பிரச்சினை இல்லை”
என கூறினார்.
எவ்வாறாயினும், ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணி சீனாவிற்கு வழங்கப்படவுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி இன்று குற்றஞ்சாட்டியது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த 15,000 ஏக்கரை சீனாவிற்கு வழங்க அரசாங்கம் உடன்படிக்கை மேற்கொண்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.