தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான முக்கிய செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.மக்கள் நீதி கட்சி மய்யக் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் ரஜினியை சந்தித்து ஆதரவு கோரவிருப்பதாக முன்னர் கமல் ஹாசன் தெரிவித்திருந்ததால் இன்றைய ரஜினி-கமல் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் இல்லத்தில் நடந்த சந்திப்பு கட்சி ரீதியிலான சந்திப்பு இல்லை என்பதால், அவரது கட்சியின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்கள் யாருக்கும் இந்த சந்திப்பு பற்றிய தகவல்கள் தெரியவில்லை என கூறுகின்றனர்.
சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரஜினியின் நலம் விசாரிப்புக்கான சந்திப்பாக இந்த சந்திப்பு இருந்திருக்கலாம் என மநீம கட்சியினர் கூறுகின்றனர். ''ரஜினியை ஒரு நெருங்கிய நண்பர் என்ற முறையில் கமல் சந்தித்திருப்பார். கட்சியினர் யாருக்கும் இந்த சந்திப்பு பற்றி தெரிவிக்கப்படவில்லை. அதிகாரபூர்வமான படங்களும் வெளியிடப்படவில்லை என்பதால், நட்பு ரீதியிலான சந்திப்பு என்றுதான் இதை பார்க்கவேண்டும். நண்பனாக தனது ஆதரவை எப்போதும் கமலுக்கு ரஜினி அளித்திருக்கிறார்.
தற்போது ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பதால், அவரது ரசிகர்கள் கமலுக்கு வாக்களிக்க ரஜினி முன்வந்தால் எங்கள் கட்சிக்கு பலம் கூடும்,''என பெயர் வெளியிட விரும்பாத மநீம கட்சியின் உறுப்பினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கட்சி ஒன்றை தொடங்கி தமிழக அரசியலில் தான் களமிறங்கப்போவதாக ரஜினி காந்த் முதலில் தெரிவித்திருந்தார். பின் வருடக் கணக்கில் அதுகுறித்த அறிவிப்பு ஏதும் வராத நிலையில், மீண்டும் தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என ரஜினி கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நிலையை காரணம் காட்டி தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என ரஜினி உறுதியாக தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள், ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்து செயல்பட விரும்பினால் மக்கள் மன்றத்திலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து செயல்படலாம் என்ற அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.