ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் அறிக்கையினை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவை ஏற்கமுடியாது என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அதன் பிரதி தனக்கு அவசியம் என பேராயர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த அறிக்கையிலுள்ள விடயங்களை ஆராய்ந்து மார்ச் 15 ஆம் திகதிக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சர் சமல் ராஜபக்ச தலைமையில் ஐவரடங்கிய குழுவை ஜனாதிபதி அமைத்தார்.
அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இக்குழுவையே ஏற்கமுடியாது என பேராயர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மாற்றமின்றி முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.