இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) பிற்பகல் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.
அப்போது இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் முஸ்லிம் எம்.பிக்கள் முறையிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
கொழும்பில் உள்ள ஷங்ரில்லா விடுதியில் பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷர்ரப் தெரிவித்துளளார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவது தொடர்பில் இம்ரான்கானிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டபோது, இதற்கான முடிவு கிட்டும் என தங்களிடம் இம்ரான் கான் கூறியதாக முஷர்ரப் தெரிவித்தார்.
"உடல்கள் பலாத்காரமாகத் தகனம் செய்யப்படும் விவகாரம் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களிடம் தான் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் கூறினார். மேலும் கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை தகனம் செய்வதை முடிவுக்குக் கொண்டு வர தம்முடன் பேசியவர்கள் விருப்பம் கொண்டிருந்ததாகவும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் எனவும் இம்ரான்கான் நம்பிக்கையூட்டினார்" என்றும் முஷர்ரப் குறிப்பிட்டார்.