கிளிநொச்சி பளை பிரதேசத்தில் கரந்தையில் வசிக்கும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை உடைத்தெறிந்து காணிகளிலிருந்து அவர்களை விரட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றுள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இந்தக் காணிகளில் 1976லிருந்த தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் காரணமாக அக்காணிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தாலும், யுத்தம் முடிவுற்றதன் பின்பு 2010லிருந்து அக்காணிகளில் மீண்டும் வசிக்கத் தொடங்கியுள்ளனர்.
அந்தக் காணி தெங்கு அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமானதெனக் கூறி அங்கு குடியிருந்தவர்கள் அப்பகுதி பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்த காணியின் உண்மையான உரிமையாளர்களிடம் காணியை ஒப்படைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் யாழ்ப்பாண அலுவலகம் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் பரிந்துரைத்திருந்தது.
ஆனால், மேற்படி காணியை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்காமையால், அக்காணியில் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து குடியிருப்பதைத் தவிர தமக்கு வேறு வழியில்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர். பொலிஸார் அந்த தற்காலிக குடியிருப்புகளை உடைத்தெறிந்துள்ளனர்.