மிகவும் குறுகிய காலத்தில் மக்களின் வெறுப்புக்கு உள்ளான ஒரே ஒரு அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளதென சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவான பௌத்த பிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
"பிரதமர் அவர்களே இந்த நாட்டை இவ்வாறு செல்ல அனுமதிக்க முடியாது. நீங்கள் கொஞ்சம் தலையீடு செய்யுங்கள். இன்று நாட்டு மக்கள் உங்களுடன் தான் இருக்கிறார்கள். வேறு யாருடனும் இல்லை. யார் என்ன சொன்னாலும் மக்கள் உங்களுடனே இருக்கிறார்கள். மஹிந்த இல்லா நாடு எமக்கு வேண்டாம் என மக்கள் கூறுகின்றனர்.
பிரதமர் பஸ்ஸில் இருந்து இறங்கியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். மீண்டும் உங்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்வோம். ஜனாதிபதி கோட்டாபய அதற்கு ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். எமக்கு தேவை உள்ளது.
குறுகிய காலத்தில் நாட்டு மக்கள் வெறுத்த அரசாங்கம் இது என்றால் யாரும் கோபப்படுவதற்கு இல்லை. அரசாங்கத்தை உருவாக்க கஸ்டப்பட்ட எங்களுக்கு அப்படியான வார்த்தைகளை கேட்க விருப்பமில்லை. நாட்டில் உருவான சிறந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் என்று சொல்வதை கேட்கவே எமக்கு விருப்பம்" என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற புத்தக வெளியீட்டில் மஹிந்த ராஜபக்ஷவை அருகில் வைத்துக் கொண்டே முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.