நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில், சம்மாந்துறை நகரில் இன்று (28) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில், பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து, மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதான அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.புஹாரி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, மாவட்ட அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது “அரசே எரிபொருள், விவசாய கிருமிநாசினிகளின் விலைகளை குறை, நிவாரணம் கொடு”, “பொருட்களின் விலையை ஏற்றாதே, மக்களின் வயிற்றில் அடிக்காதே”, பொருட்களின் விலை விண்ணை நோக்கி, மக்கள் சட்டியிலிருந்து அடுப்புக்குள், பிள்ளைகள் பட்டினியை நோக்கி”, “உலக சந்தையில் குறைவு சலுகையை மக்களுக்கு வழங்கு”, வாழ்க்கை செலவைக் குறை, மக்களுக்கு நிவாரணம் வழங்கு”போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.