உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கறுப்பு ஞாயிறு அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் நீதி கிடைக்கவில்லை.
அதன்படி, இன்று நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கலந்துகொள்ளும் மக்கள் கறுப்பு உடையணிந்து அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தெய்வீக வழிபாட்டிற்கு பிறகு தேவாலயத்திலிருந்து வெளியே வந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அமைதியான போராட்டம் நடத்த நாட்டின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் பேராயர் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையின் கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டின் தலைவர்,அதி மேற்றிராணையார் பிஷப் வின்ஸ்டன் பெநாந்து, ஐந்து காரணிகளின் அடிப்படையில் இன்று கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்டும் என்று கூறினார்.
தெய்வீக வழிபாட்டிற்குப் பிறகும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி அனைத்து தேவாலயங்களும் அமைதியான எதிர்ப்புத் தெரிவிக்கத் தயாராகி வருவதாக பிஷப் மேலும் தெரிவித்தார்.
கறுப்பு ஞாயிறு கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து நாடு முழுவதும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம் பெறும் என மல்கம் கார்டினல் ரஞ்சித் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் நேற்று 'கிராமத்துடனான உரையாடல்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்த தாக்குதல் குறித்து கார்டினலின் வலி நியாயமானது என்றும், அதைப் பற்றி பேசுவது சரியானது என்றும் கூறினார்.
ஏப்ரல் 21, 2019 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு சமீபத்தில் தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது, இதில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் ஐ.ஜி.பி. மற்றும் உளவுத்துறை தலைவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கறுப்பு ஞாயிறு போராட்டத்தை தேசிய பிக்கு முன்னணி ஆதரிக்கிறது!
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரி, இலங்கை ஆயர்களின் மாநாட்டின் தலைமையில், மார்ச் 7, 2021 இன்று காலை 8.30 மணி முதல் காலை 9.00 மணி வரை கத்தோலிக்க தேவாலயங்களில் நாடு முழுவதும் நடைபெறவுள்ள கறுப்பு ஞாயிறு போராட்டத்தில் கலந்து கொள்ள தேசிய பிக்கு முன்னணி முடிவு செய்துள்ளது.
கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் வெற்றிக்கு சிறப்பு பங்களிப்பை வழங்க தேசிய பிக்கு முன்னணி முடிவு செய்துள்ளது.