அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் சட்டத்தரணிகள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
பத்து சட்டத்தரணிகளை உள்ளடக்கிய குழு, மார்ச் 9ஆம் திகதி ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழு அதன் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு செயற்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் பெருந்தொகை நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
2020 ஜனவரி 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய, 2015 ஜனவரி 08 முதல் 2019 நவம்பர் 16 வரையிலான காலகட்டத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
வர்த்தமானி அறிவிப்பின் முதல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, அரச அதிகாரிகள், பொது நிறுவனங்களின் ஊழியர்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் இலங்கை பொலிஸ் உறுப்பினர்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நபர்களை மாத்திரமே விசாரணை செய்ய ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் இவ்வாறு காணப்படுகின்ற போதிலும், வர்த்தமானி அறிவிப்பில் சேர்க்கப்படாத துறைகளைச் சேர்ந்தவர்கள் குறித்தும் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியுள்ளதாக,
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சட்டத்தரணிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இது அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்திய விடயம் என சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.
"தமக்கு விசாரணை செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட துறைகளில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டமையால், அரசாங்கத்தின் பெருந்தொகை நிதி வீணடிக்கப்பட்டு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.”
அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, அதன் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு, சட்டத்தரணிகள் குழு 22 எடுத்துக்காட்டுகளை சமர்ப்பித்துள்ளது.
அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழு கிட்டத்தட்ட ஒரு வருடமாக செயற்பட்டு வருகிறது, அதன் பராமரிப்பு மற்றும் பிற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பெருந் தொகையை செலவிட்டுள்ளது.
"இந்த பணம் மக்களின் பணம் என்பதால், அந்த வர்த்தமானி அறிவிப்பில் உள்ள அதிகாரங்களுக்கு அப்பால் செல்வது பொது நிதியை வீணடிப்பதாகும்.”
அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் செயற்பட்டதோடு, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திர ஜயதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் உறுப்பினர்களாக செயற்பட்டனர்.
இலஞ்ச சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை அவர்கள் செய்துள்ளதால், இது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பத்து உச்ச நீதிமன்ற சட்டத்தரணிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டத்தரணிகளான, சேனக பெரேரா, சைனுல் லுதுப், மஞ்சுள ஸ்ரீ சந்திரசேன, அச்சலா செனவிரத்ன, தம்பையா ஜெயரட்னராஜா, ஹேமந்த விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ச, உபாலி ரத்நாயக்க, அசோக விஜேவர்தன மற்றும் சுலா அதிகாரி ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.