குருநாகல், மத்தளை, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை முழுமையாக நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் இதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தை செயற்படுத்த வேண்டிய விதம் குறித்து அமைச்சின் அதிகாரிகளுக்கு இதன்போது பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நவீன சந்தை கட்டடத்தொகுதி, அனைத்து வசதிகளையும் கொண்ட மொத்த விற்பனை நிலையம், வாராந்த சந்தை, வாகன நிறுத்துமிடம், நகர் பூங்கா, பஸ் தரிப்பிடம், பல்நோக்கு கட்டடம் மற்றும் நடுத்தர வர்க்க வீடமைப்புத் தொகுதி உள்ளடங்கலாக பெலிஅத்த நகர் அபிவிருத்தி செய்யப்படும் விதம் குறித்து நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளால் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இரட்டை வழிச்சாலை அமைப்பு, வெளியிலும் உள்ளேயும் சுற்றுவட்டப் பாதை, நான்கு பாதைகள் கொண்ட சாலை அமைப்பு என்பவற்றை நிர்மாணிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மத்தளை விமான நிலையத்தை மையமாகக் கொண்டு வர்த்தகம், தொழில், குடியிருப்பு வசதிகள், சுற்றுலா, சுகாதார வசதிகள் மற்றும் விவசாய மேம்பாட்டு வலயங்களை நிறுவுதல் மற்றும் மத்தளை – லுணுகம்வெஹெர பகுதியில் செயற்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தியுள்ளார்.
குருநாகல் நகரை நவீன நகரமாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது பிரதமர் கேட்டறிந்துகொண்டாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, குருநாகல் நகரை மையமாகக் கொண்டு எதிர்காலத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் செயற்படுத்தப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதமரின் முடிவு இப்படியிருக்க,இலங்கையில் இன்னும் எத்தனை கிராமங்கள் அடிப்படை வசதி இன்றி இருக்கின்றது அவர்களும் இந்த நாட்டு மக்கள்தான்.