சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு காலமானார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு (74) இன்று அதிகாலை காலாமானார்.
முன்னதாக கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தபோது, இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி குமுதாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.கெப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பாண்டு அவரது பேச்சு, சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதே வேலை,
ஒவ்வொரு பூக்களுமே... பாடல் மூலம் பிரபலமான கோமகன் கொரோனா பாதிப்புக்கு மரணமடைந்துள்ளார்
ஆட்டோகிராப் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் மூலம் பிரபலமான கோமகன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளார்.
தமிழில் இயக்குநர் மற்றும் நடிகரான சேரன் மற்றும் நடிகைகள் சினேகா, கோபிகா ஆகியோரது நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே... என்ற பாடல் மக்களை அதிகம் ஈர்த்தது.
இந்த பாடலில், கண் பார்வையற்ற நிலையிலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து சாதிக்கலாம் என்ற நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்த பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் கோமகன். சமீபத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி இயக்குநர் சேரன் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.. என தெரிவித்து உள்ளார்.