இலங்கையில் எரிவாயு விநியோகிக்கும் இரு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாஃவ்ஸ் ஆகிய நிறுவனங்கள் இரண்டும் இதுவரையில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக அறிய முடிந்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளமை காரணமாக, இந்த இரு நிறுவனங்களும் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன. இந்நிலையில் எதிர்வரும் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலின்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுவதாக அறிய முடிந்துள்ளது.
இந்த நிலையை கவனத்தில் கொண்டு வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் திறைசேரியின் அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு இந்த நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடி, இந்த நிலையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளதாகவும் அறிய முடிந்துள்ளது.
ஆனாலும், இதுவரையில் இந்த முன்மொழிவுக்கான அனுமதி கிடைக்காமையினால், இந்த இரு நிறுவனங்களில் ஒரு நிறுவனம் விரைவில் மூடப்படக்கூடிய ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளதாகவும், மற்றைய நிறுவனம் இதுவரையில் 900 மில்லியன் ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அறிய முடிகின்றது.
குறிப்பாக, சந்தையில் லாஃவ்ஸ் எரிவாயு சிலின்டர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.