காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டிடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல். இந்த தாக்குதல் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் நடந்தது.
முன்னதாக ஜலா டவர் என்ற அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் ஜாவத் மெஹ்தியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி அந்தக் கட்டடத்தை தாக்கவிருப்பதாகவும், ஒரு மணி நேரத்தில் அதை காலி செய்துகொள்ளும்படியும் கூறியுள்ளார். இத்தகவலை ஜாவத் மெஹ்தி கூறியதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை கூறியுள்ளது.
பத்திரிகையாளர்கள் தங்கள் கருவிகளை எடுத்துக்கொள்ள கூடுதலாக ஒரு பத்து நிமிடம் அவகாசம் தரும்படி ஜாவத் அந்த அதிகாரியிடம் கெஞ்சுவதை ஏ.எஃப்.பி. செய்தி முகமை பார்த்துள்ளது. ஆனால், மறுமுனையில் பேசிய அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.
கத்தார் அரசு நிதியுதவியோடு நடக்கும் அல் ஜசீரா செய்தி செனல், அந்த கட்டிடம் வான் தாக்குதல் மூலம் தகர்க்கப்படுவதை நேரலையாக ஒளிபரப்பியது.
"அல் ஜசீரா மௌனமாகாது," என அந்த தொலைக்காட்சியின் ஆங்கில செய்தி வாசிப்பாளர் ஹல்லா மொஹிதீன் உணர்ச்சிபூர்வமாக கூறினார்.
இந்த கட்டடத்தில் இருந்து 11 ஆண்டுகளாகப் பணியாற்றிய அல் ஜசீரா செய்தியாளர் சஃப்வத் அல்-கஹ்லௌத் இந்த தாக்குதல் பற்றிக் கூறும்போது, "இந்தக் கட்டடத்தில் இருந்து பல நிகழ்வுகள் குறித்து செய்தி அளித்துள்ளோம். தொழில்முறை, தனிப்பட்ட அனுபவங்களை நேரலையாக அளித்துள்ளோம். எல்லாம் இப்போது இரண்டு நொடியில் அழிந்துவிட்டது" என்று கூறினார்.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஹமாஸ் குழுவின் உளவுத்துறை அலுவலகங்களுக்கு சொந்தமான "ராணுவத்தின் ஆயுதங்கள்" இருப்பதாக தெரிவித்திருந்தது.
இருப்பினும் அந்த கட்டடத்தின் உரிமையாளர் ராணுவத்தை சேர்ந்த யாரும் அங்கு இருக்கவில்லை என்று காசாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ருஷ்டி அபுவாலோஃபிடம் தெரிவித்துள்ளார்.
அந்த கட்டடத்தில் ஊடக நிறுவனங்களும், பிற வர்த்தகமும், 60 குடியிருப்புகளும் மட்டுமே இருந்தன என்றும் கட்டட உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலால் அழிக்கப்பட்ட கட்டிடங்களில் இந்த கட்டடம் மிகப்பெரியது.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் ஜென் சாக்கி, "நாங்கள் இஸ்ரேலை நேரடியாக தொடர்பு கொண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது முக்கிய பொறுப்பு என தெரிவித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.