மியன்மார் நாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியன்மாரில் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளை பின்பற்றி வருகின்றனர். மியன்மாரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 790 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவாகியுள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மியான்மர் ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவில் பலரும் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச அழகி போட்டியில் மியன்மார் நாட்டின் சார்பில் பங்கேற்ற பெண் மியன்மார் ராணுவத்திற்கு எதிரான சண்டையில் கிளர்ச்சியாளர்கள் குழுவுடன் இணைந்துள்ளார்.
மியன்மார் நாட்டை சேர்ந்தவர் ஹடர் ஹட்டி ஹட்டி. இவர் 2013 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கிராண்ட் சர்வதேச அழகி போட்டியில் மியன்மார் நாட்டின் சார்பில் பங்கேற்றார். சர்வதேச அழகி போட்டியில் அவர் இறுதி சுற்றுக்கு தேர்வு ஆகவில்லை ஆனால், மியன்மார் நாட்டின் சார்பில் ஹடர் ஹட்டி ஹட்டி பங்கேற்றார். தற்போது 32 வயதான ஹடர் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
ஆனால், அவர் தற்போது மியன்மார் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் குழுவில் இணைந்துள்ளார். மியன்மாரின் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணத்தில் வாழ்ந்துவரும் இன ஆயுத குழுக்களுடன் இணைந்து ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் களம் இறங்கியுள்ளார்.
ஹடர் ஹட்டி ஹட்டி தனது கையில் நவீன ரக துப்பாக்கியுடன் காட்டுப்பகுதியில் நிற்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவில், என்னால் முடிந்த வரை நான் போராடுவேன். அனைத்தையும் இழக்க நான் தயாராக உள்ளேன். எனது உயிரையும் கொடுக்க நான் தயாராகிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.