கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் இன்னமும் சரியான முறையில் அவதானம் செலுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுத்துள்ளார்.
கொழும்பு - எத்துல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா தொற்று மிக ஆபத்தான நிலையிலுள்ளதுடன் சமூகமயமாகியுள்ளது
அத்தோடு கொரோனா தொற்றாளர்களின் சதவீதத்தை மறைக்க நினைத்தாலும் தற்போதைய நிலையில் உண்மைத் தன்மையை நாளாந்தம் அறியக் கூடியதாக உள்ளது. சகல மாவட்டங்களிலும் கொரோனா பரவியுள்ளது இது இரகசியம் இல்லை.
அத்தோடு, கொரோனா தொற்றால் ஏற்படும் ஆபத்தான நிலை செப்டெம்பர் மாதம் வரை நீடித்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவிலுள்ள வொஷிங்டன் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் வைரஸை தடுக்க அல்லது கட்டுப்படுத்த அரசாங்கம் இன்னமும் சரியான கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.