நேபாளத்தில் பிரதிநிதிகள் சபையை கலைத்து பிரதமர் தேர்தலுக்கான புதிய திகதிகளை அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி அறிவித்துள்ளார்.
நேபாள நாட்டில் 271 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான சி.பி.என்-யு.எம்.எல். கட்சிக்கு 121 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் பெரும்பான்மை பெற 136 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.
இந்நிலையில், ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10ம் திகதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது. இதில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தோல்வியடைந்து ஆட்சியையும் இழந்தார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க கடந்த 13ந்தேதி இரவு 9 மணி வரை அதிபர் பித்யா தேவி பண்டாரி கெடு வழங்கினார். ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகளால் முடியவில்லை.
எனவே நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒலியையே அதிபர் மீண்டும் நியமித்தார். அதன்படி கடந்த 14ம் திகதி அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்று கொண்டார். மேலும் 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் கே.பி. சர்மா ஒலி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இந்த நிலையில், நேபாளத்தில் பிரதிநிதிகள் சபையை கலைத்து பிரதமர் தேர்தலுக்கான புதிய திகதிகளை அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி அறிவித்துள்ளார். இதன்படி, வருகிற நவம்பர் 12,19 ஆகிய திகதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியேற்க முன்வந்த 61 உறுப்பினர்களை கொண்ட நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தூபா மற்றும் கே.பி. சர்மா ஒலி ஆகியோரின் கோரிக்கையை அதிபர் பித்யா தேவி ஏற்க மறுத்து விட்டார்.