அதிதீவிர யாஸ் புயலானது கரையை கடந்து வருவதால் ஒடிசா, மேற்கு வங்காளத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறி ஒடிசா அருகே வங்கக்கடலில் தற்போது கரையை கடந்து வருகிறது. இதன்படி தாம்ரா - பாலசோர் இடையே யாஸ் புயல் கரையை கடந்து வருகிறது. கரையை கடக்கும் போது 185 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் யாஸ் புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேற்கு வங்காள மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் சந்திபூர், பாரதீப், தம்ரா ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழையுடன் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. சூறைக்காற்றில் வீடுகள், கட்டடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் ஏற்கனவே புயல் பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். புயலுக்கு பிறகான உதவிகளுக்கு பேரிடர் மேலாண்மை படையினர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.