ஜப்பானிய சரக்கு கப்பலுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று மோதியதில் காணாமல் போன 3 மாலுமிகளை தேடும் பணி நடந்து வருகிறது.
ஜப்பான் நாட்டின் மேற்கே எஹிம் மாகாண கடற்பகுதியில் 11,454 டன் எடை கொண்ட அந்நாட்டு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், இரசாயன பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற வெளிநாட்டு கப்பல் ஒன்றுடன், சரக்கு கப்பல் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த திடீர் விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல் சேதமடைந்து நீரில் மூழ்க தொடங்கியது. அந்த கப்பலில் 12 மாலுமிகள் இருந்தனர். சரக்கு கப்பல் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் கடலில் மூழ்க தொடங்கியது. இந்த விபத்தில் மாலுமிகளில் 3 பேரை காணவில்லை.
அவர்கள் ஜப்பானிய நாட்டை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மார்ஷல் தீவில் பதிவு செய்யப்பட்ட 2,696 டன் எடை கொண்ட வெளிநாட்டு கப்பலில் 13 பேர் இருந்தனர்.
அவர்களில் 8 பேர் தென்கொரியா நாட்டை சேர்ந்தவர்கள். மற்ற 5 பேர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். இதனை ஜப்பானிய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. காணாமல் போன 3 மாலுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.