20 ஆம் நூற்றாண்டில் தென் ஆபிரிக்க நாடான நமீபியாவில் இனப்படுகொலை செய்ததாக ஜேர்மனி அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நமீபியாவில் அதன் காலணித்துவ கால ஆக்கிரமிப்பின் போது ஜேர்மனி காலணித்துவவாதிகள் பல்லாயிரக்கணக்கான Herero மற்றும் Nama மக்களை கொன்று குவித்தனர்.
இந்நிலையில், நமீபியாவை அதன் காலணித்துவ கால ஆக்கிரமிப்பின் போது இனப்படுகொலை செய்ததாக ஜேர்மனி அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது, மேலும் நிதி உதவி வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.
ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas, நமீபியாவில் நடந்த படுகொலைகளை இனப்படுகொலை என்று ஒப்புக்கொண்டார்.
நமீபியா மற்றும் பாதிக்கப்பட்ட சந்ததியினரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை அங்கீகரிக்கும் வகையில், 1.1 பில்லியன் யூரோக்களுக்கு மேல் மதிப்புள்ள திட்டத்தின் மூலம் நமீபியா நாட்டின் வளர்ச்சிக்கு ஜேர்மனி ஆதரவளிக்கும் என கூறினார்.
இந்த திட்டம் மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நமீபியாவின் உள்கட்டமைப்பு, சுகாதார மற்றும் பயிற்சி திட்டங்களுக்கான செலவினங்களின் மூலம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பயனளிக்கும் என்று ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas கூறினார்.
ஆனால் நமீபியாவின் சில பாரம்பரிய இனக்குழு தலைவர்கள் இதுவரை ஜேர்மனி ஒப்பந்தத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டதாக அரசுக்கு சொந்தமான செய்தித்தாள் தெரிவித்துள்ளது.