யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இன்று (30) 12 மையங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள், நேற்று (29) கிடைத்துள்ளன. இந்தத் தடுப்பூசிகளை அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய ஏற்பாட்டை, சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
அதனடிப்படையில், எதிர்வரும் 15 நாள்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இதனை மிகத் துரிதமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை, வடமாகாணச் சுகாதாரப் பிரிவினர்; முன்னெடுத்ததற்கமைய, இன்று (30) தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது.
தெரிவுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் கர்ப்பிணி பெண்கள் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பகுதி மக்கள் தமது விருப்பத்தின்படி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும். எனினும், தடுப்பூசி நடவடிக்கைகளில் தெரிவு செய்யப்பட்ட நபர்களைத் தவிர வேறு பிரிவுகளில் இருந்தோ அல்லது பெயர் பட்டியலில் இல்லாதவர்களோ அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிராம உத்தியோகத்தர்கள் எத்தனை மணிக்கு அங்கே தடுப்பூசி பெற செல்ல வேண்டுமென, மக்களை அறிவுறுத்துவார்கள். அந்த நேரத்துக்குச் சரியாக சென்று தடுப்பூசியை பெற்றப் பின்னர் வீடு திரும்ப முடியும்.