தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஏற்பாடு பொலிஸ் நிலையத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் குருநாகலில் இடம்பெற்றுள்ளது. குருநாகல் நகரசபை முதல்வர் துஷாரா சஞ்சீவவின் பிறந்தநாள் கொண்டாட்டமே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை ஏற்பாடு செய்ததற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகரை (ஏஎஸ்பி) இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது. குருநாகல் பொலிஸ் நிலைய வளாகத்திற்குள் நேற்று நடைபெற்ற ஒரு பிரித் ஓதும் நிகழ்வில், மேயருக்காக கேக் வெட்டுவதை ஏஎஸ்பி ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த பிறந்தநாள் விழா தொடர்பாக விசாரிக்க சிறப்பு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு குருநாகல் பொலிசாரால் 7 நாள் பிரித் ஓதும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று நடந்த இந்த நிகழ்வில் குருநாகல் மேயர் கலந்து கொண்டார், அந்த சமயத்தில் அவரது பிறந்தநாளும் அந்த இடத்தில் கொண்டாடப்பட்டது.
குருநாகல் ஏஎஸ்பி, மேயரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக கேக் வெட்டுவதை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதேவேளை கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவுவதைத் தடுக்க 2021 மே 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அனைத்து பொதுக் கூட்டங்களும் விருந்துகளும் தடைசெய்யப்பட்ட நேரத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.