கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறை போக்குகளுக்கு ஆரம்பத்திலிருந்தே சவால் விட்ட முன்னணி அறிஞர் பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் காலமானார்.
1980களில் ஆட்சியிலிருந்த ஜயவர்தன அரசாங்கத்திற்கு சவாலாக உருவாகிய மாற்றுக் குழுவின் உறுப்பினராக இருந்த கத்ரி இஸ்மாயில், அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக் கழக ஆங்கிலப் பிரிவின் பேராசிரியராக கடமையாற்றியதோடு, இலங்கை தேசியப் பிரச்சினை சம்பந்தமாக ஆராய்ந்து முற்போக்கான கருத்துக்களை முன்வைத்தவர் என்ற வகையில் பிரபலமானார்.
விசேடமாக சிறுபான்மை இனங்களுக்கு மத்தியிலான ஒடுக்குமுறையை அரசியல் தாபனத்தின் பிரச்சினையாக விமர்சித்த அவர் எழுதிய நூல்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது நீண்டகாலமாக தொடுக்கப்பட்டு வரும் ஒடுக்குமுறையை சமூக விஞ்ஞான ரீதியிலும், அரசியல் ரீதியிலும் வற்புறுத்தக் கூடிய படைப்புகளாக இருந்தன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களையும், அதன் பின்னணியிலிருந்த தீவிரவாத குழுக்கள் சம்பந்தமாகவும் அவர் கேள்வி எழுப்பினார். 2014ல் தர்கா நகர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை அடிப்படையாகக் கொண்ட அவரது பகுப்பாய்வு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
கடந்த வருடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தொற்றுநோயைப் பயன்படுத்தி இராணுவமயமாக்கலை உயர் மட்டத்திற்கு கொண்டு வந்தமை, விசேடமாக மக்களின் ஒழுக்கநெறியோடு சம்பந்தப்பட்ட, இராணுவத் தலைமையிலான செயலணி அமைக்கப்பட்டமை சம்பந்தமாக கடுமையாக விமர்சித்த பேராசிரியர் கத்ரி இஸ்மாயில், ஜனாதிபதி ஒரு பயங்கர நபர் எனக் குறிப்பிட்டு அவருக்கு சவால் விட்டிருந்தார்.
கடந்த வருட ஜூன் மாதம் க்ரவுன்ட்வீவ்ஸ் வலைத்தளத்திற்கு எழுதிய கடிதத்தில் முறையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அவரது கருத்துக்களுக்கு சவால் விடவோ அல்லது சமன் செய்யவோ இலங்கை அறிவுசார் சமூகத்திலிருந்து இதுவரை இதுபோன்ற பகுப்பாய்வு விமர்சனங்கள் எதுவும் வெளிவரவில்லை என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது.