உலக அளவில் இதுவரை விநியோகிக்கப்பட்ட 200 கோடி கொரோனா தடுப்பூசிகளில் 60 சதவீதம் மூன்று நாடுகளுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் இதுவரை 10 சதவீதத்துக்கு அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.உலக அளவில் இதுவரை விநியோகிக்கப்பட்ட 200 கோடி கொரோனா தடுப்பூசிகளில் 60 சதவீதம் மூன்று நாடுகளுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறியதாவது;-
உலகம் முழுவதும் இதுவரை 200 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 60 சதவீத தடுப்பூசிகள் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கே சென்றடைந்துள்ளன. கோவாக்ஸ் திட்டம் தடுப்பூசியை உலக நாடுகளிடையே பகிர்ந்தளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
கோவாக்ஸ் திட்டம் மூலம் சுமார் 127 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தனி நபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் சுமார் 0.5 சதவீத தடுப்பூசிகளே சென்றடைந்துள்ளன. இன்னும் பல நாடுகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், வயதானர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படவில்லை.
எனவே, தடுப்பூசிகள் விரைவாக விநியோகம் செய்வதை நாம் அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.