திருக்கோவில், பிரதேச சபைக்குட்பட்ட மண்டானை - சாகமம் பகுதியில் பிரதேச செயலகத்தின் அனுமதியின்று நிர்மாணிக்கப்படும் கல்குவாரி (கல் உடைக்கும் தொழிற்சாலை) குறித்து கிராம மக்கள் கவலையையும், விசனத்தையும் தெரிவித்துள்ளனர்.
குறித்த கல்குவாரி நிர்மாணமானது எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று மண்டானை கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அதாவது இந்த நிர்மாணப் பணியினால் ஒலி மற்றும் காற்று மாசுபாடு என்பவற்றை எதிர்நோக்கக் கூடும் என்றும், கனரக வாகனங்களில் போக்குவரத்தினால் ஏற்கனவே சேதமடைந்துள்ள மண்டானை கிராம வீதியானது கல்குவாரி நிர்மாணத்தின் பின்னர் மேலும் பாதிப்படையக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம் நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறு திருக்கோவில் பிரதேச செயலக மற்றும் பிரதேச சபையின் உத்தரவுகள் இருந்தபோதிலும் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை கவலையளிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளானர்.
ஆகவே கல்குவாரி நிர்மாணப் பணிகளை தற்போதைய இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றியமைத்து முன்னெடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை இந்த கல்குவாரி நிர்மாணப் பணிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் தங்கையா கஜேந்திரன்,
மேற்படி கல்குவரி நிர்மாணத்தினை மேற்கொள்ளும் நபர், கல்குவாரியை நிர்மாணிப்பதற்கான அனுமதிகளை ஏனைய அரச நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.
எனினும் அந்த கல்குவாரியை எந்த இடத்தில் நிர்மாணிக்க வேண்டும் என்பது தொடர்பான அனுமதியினை அவர் திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றிடமிருந்து இதுவரை பெறவில்லை.
எனவே பிரதேச செயலக மற்றும் பிரதே சபை அனுமதியின்றி அரச காணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்குவாரி நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறு சாகமம் கிராம சேவகர் உத்தியோகத்தர் பார்த்திபனூடாக சம்பந்தப்பட்ட நபருக்கு கடந்த 30 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
அதேநேரம் காணி தொடர்பான உரிய ஆவணங்களுடன் என்னை பிரதேச செயலகத்தில் வந்து சந்திக்குமாறும் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இன்று வரை (2021.06.11) என்னை வந்து சந்திக்காத நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் பிரதேச செயலகத்துக்கு சமூகமளித்து என்னை சந்திக்குமாறு மீள் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பினையும் அவர் புறக்கணித்து செயற்படும் பட்சத்தில் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திருக்கோவில் பிரதேச சபையினூடாக சாகமம் கிராம சேவகரினால் நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறு சுவரொட்டிகளும் குறித்த கல்குவாரி தொழிற்சாலையின் நிர்மாணக் கட்டிடத்தில் இன்றைய தினம் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.