சீனாவின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவர் மர்ம மரணம் அடைந்து உள்ளார்.சீனாவில் அமைந்துள்ள ஹார்பின் பொறியியல் பல்கலை கழகத்தின் துணை தலைவர் மற்றும் அந்நாட்டின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவராக பேராசிரியர் ஜாங் ஜீஜியான் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியில், ஹார்பின் பல்கலை கழகம் சார்பில் வெளியான அறிவிப்பில் பேராசிரியர் ஜாங் ஜீஜியான் கடந்த 17ந்தேதி காலை 9.34 மணியளவில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார்.
அதற்காக அவரது குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஜாங்கின் மரணம் பற்றி வேறு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. பல்கலை கழகத்தின் வலைதள பக்கத்தில் நேற்று வரை ஜாங்கின் பெயர் தலைமைத்துவ பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
ஜாங் அந்த பல்கலை கழகத்தின் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராகவும் மற்றும் சீன அணு கழகத்தின் துணை தலைவர் ஆகவும் இருந்து வந்துள்ளார். இதுதவிர பல்கலை கழகத்தின் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைக்குழு உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.