பழைய வழக்குகளை விசாரிப்பதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கவேண்டும் அதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், கடந்த ஒரு மாதத்துக்குள் 100க்கு மேற்பட்டவர்கள் புதிதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கவேண்டும்.
பாராளுமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற வாதவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சொத்துக்கள் இருக்கின்றன. அரசாங்கத்துக்கு ஆதரவானவர், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றார். ஆனால், பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதற்காக கடந்த ஒரு வருடத்தில் 100க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். பிள்ளையானுக்கு பிணை வழங்கியதைப் போல, பிள்ளைகளுக்கும் பிணை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவும் என்றும் கோரிநின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிணையில் விடுக்கப்பட்டார். அத்துடன், அவருக்கு எதிரான வழக்கும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.