கொவிட் -19 தொற்றினால் பெருந்தோட்ட மக்கள் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அப்பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மற்றும் 5, 000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் வேலைத் திட்டம் என்பன முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை.
தேயிலை தோட்டங்களிலும் சீனர்களை பணிக்கு அமர்த்துவதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வியெழுப்பினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உரப் பிரச்சினையால் விவசாயிகள் பலரும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் எவ்வித திட்டமிடலும் இன்றி முன்னெடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தினால் விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இணையவழி கல்வியூடாக கற்பதற்கான தொழிநுட்ப அறிவு மாணவர்களுக்கு காணப்பட்டாலும் , அதற்கான போதிய வசதியின்மையால் சகல பகுதிகளிலுள்ள மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு முறையான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. 5, 000 ரூபா நிவாரண கொடுப்பனவு கட்சி சார்பாகவே வழங்கப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முறையான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.