மின்னேரிய தேசிய பூங்காவில் வன பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியாக இராணுவ மேஜர் ஜெனரலுக்கு கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னேரிய தேசிய பூங்காவில் யானைக் குட்டியொன்றை கடத்திச் சென்றது சம்பந்தமாக வன சீவராசிகள் திணைக்களம் கெகிராவ நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமளித்ததன் பின்பு குறித்த அதிகாரியை இன்று (28) நீதிமன்றத்தில ஆஜராகுமாறு கெக்கிராவ நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வன பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், மின்னேரிய தேசிய பூங்காவில் சட்ட விரோதமாக யானைக் குட்டியொன்றை சிலர் பிடிக்க முயற்சி செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீதித் தடை போட்டு வாகனங்களை பரிசோதிக்கும் போது பூங்காவிலிருந்து ளெியில் வந்த இரு வாகனங்கள் தடையையும் மீறி சென்றதாகவும், அவை இராணுவத்திற்கு சொந்தமான வாகனங்கள் என அடையாளம் கண்டதாகவும் கூறினர்.
மேற்படி வாகனங்களை பின்தொடர்ந்து சென்ற வேளையில் பின்னால் வந்த இராணுவ வாகனங்களிலிருந்து இறங்கிய இராணுவ அதிகாரிகள் வன பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கி அச்சுறுத்தியதாகவும், பொலிஸார் வந்த பின்னர் அவர்கள் விலகிச் சென்றதாகவும் தெரிய வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் விளக்கமளித்த இராணுவ செய்தியாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, மேற்படி சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் அனுராதபுரம் 21வது படை தலைமையகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக ஹபரனயிலிருந்து அனுராதபுத்திற்கு வந்து கொண்டிருக்கும் போது வன சீவராசிகள் திணைக்களத்தின் இரு வாகனங்கள் பின்னால் வந்துள்ளன.
மேஜர் ஜெனரல் வாகனத்தை இராணுவ முகாமிற்குள் செலுத்திய பின்னர் பின்னால் வந்த வன பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வாகனத்தில் யானைக் குட்டியொன்று இருப்பதாக அங்கு காவலுக்கு நின்ற அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். என்றாலும், பொய் குற்றம் சுமத்தியதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக சம்பந்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஹபரன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகக் கூறிய இராணுவ ஊடக செய்தியாளர் இதன் போது எந்தவொரு நபரும் தாக்கப்படவில்லையெனவும் கூறுகிறார்.